புதுச்சேரி, ஜூலை 12:
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியையிடம், டெல்லி போலீஸ் அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திய மர்ம நபர் ரூ.9 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியையிடம், டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் பேராசிரியையின் பெயரில் சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் தகவல் மோசடி நடந்துள்ளதாக கூறி, விசாரணைக்காக டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என தெரிவித்தார். பின்னர், டெல்லி போலீஸ் என மற்றொரு மர்மநபர் தொடர்பு கொண்டு, பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரியுடன் தொடர்பு இருப்பதாகவும், பண மோசடி குற்றச்சாட்டில் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் என கூறியதால், அதனை நம்பி பேராசிரியை ரூ.9,69,362 லட்சம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து சிலரிடம் ஆலோசனை கேட்ட பேராசிரியை, இது மோசடி என்று உணர்ந்தார்.பின்னர் உடனடியாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.