கடலூர், ஜூலை 8:
கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது விழுப்புரம் நோக்கி வந்த ரயில் மோதியது. ரயில் மோதியதில் வேன் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, வேன் ஓட்டுநர் கேட் கீப்பரிடம் கேட்டை திறக்க வலியுறுத்தியதால் கேட் மூடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதால் கேட் மூடப்படாமல் இருந்தது என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரயில்வே அதிகாரிகள் கேட் கீப்பரை கைது செய்து, விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.