டெல்லி, பிப்ரவரி 25:
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு (வயது 101) இன்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானார்.
நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பொதுவாழ்வில் சிறிதும் தன்னலம் கருதாமல் சமூகத்திற்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொது உடைமை இயக்கத்தின் முன்னோடியுமான நல்லக்கண்ணுவின் மறைவுச் செய்தி செய்தியறிந்து ஆறாத் துயரமடைந்தேன்.
தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த போராளி, ஐயா நல்லக்கண்ணு.
எளிமை, நேர்மை, தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவற்றால் அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை.
அவரது மறைவு பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட நல்லகண்ணுவை எதிர்த்து பாஜக வேட்பாளராக களமிறங்கிய சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.