சென்னை, பிப்ரவரி 25:
மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நல்லகண்ணு இன்று பகல் 1.55 மணிக்கு காலமானார்.
அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
நாளை (பிப்.26) மாலை 4 மணி வரை அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது விருப்பப்படியே உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், நல்லகண்ணுவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் முழு மரியதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ”தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.