டெல்லி, பிப்ரவரி 11:
நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் விவாதம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை காலை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளையும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.
பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகும்.
குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.
அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ பதிப்பை மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.