சென்னை, ஜனவரி 29:
இந்தியா உலகளாவிய கல்வி மாநாட்டில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் கையெழுதிடப்பட்டன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 29) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், “இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026” (India Global Education Summit 2026) தொடக்க விழாவில் ‘தமிழ்நாடு அறிவுசார் நகரம்’ (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், அறிவு, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டின் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்துகுளம், மேல்மளிகைப்பட்டு மற்றும் இனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அறிவுசார்ந்த ஒரு சூழலை உருவாக்கி, தமிழ்நாட்டை அறிவுசார் சிறப்பிற்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்கப்படவுள்ளது.
இந்நகரம், தனித்தனி நிறுவனங்களின் தொகுப்பாக இல்லாமல், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி ஒன்றிணையும் ஒரு ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இருக்கும். வரும் ஆண்டுகளில், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் புத்தாக்கக் குழுக்களுடன் இணைந்து 25,000-க்கும் மேற்பட்ட கற்பவர்களை இது உருவாக்கும்.
மெல்போர்ன் பல்கலைக்கழகம் – குவாண்டம் கணினி மற்றும் வேளாண் தொழில்நுட்ப துறைகளில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தை 20,000 சதுர அடியில் 35 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து ஆண்டுகளில் Knowledge Corridor-ஐ நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 25 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 200 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
ஐஐடி சென்னை – மேம்பட்ட ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி மையம், மின்சார வாகனங்களுக்கான மாற்று ஆராய்ச்சி மையம் மற்றும் சோதனை ஆய்வகத்தை 40,000 சதுர அடியில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge Tower-ல் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 100 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.