சென்னை, அக்டோபர் 21:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் புதுப் பட்டாடை அணிந்து, இனிப்புகள் தயாரித்து, பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் நேற்றிரவு முழுவதும் இடைவிடாது பட்டாசு சத்தம் முழங்கியது.
இந்த நிலையில் இன்று காலை நகரம் முழுவதும் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டது. அந்த பணியின் போது, நேற்று மாலை 6 மணி வரை மொத்தம் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் என அதிகப்படியான கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டது. நகரம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகளில் 6,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
அகற்றப்பட்ட கழிவுகள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு கும்மிடிபூண்டி, பெங்குடி,கொடுங்கையூர் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க பொதுமக்களிடம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தீபாவளி நாளையொட்டி மாநிலம் முழுவதும் அவசர சிகிச்சை சேவைகளிலும் அதிக அழைப்புகள் வந்துள்ளன. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தகவலின்படி, வழக்கத்தை விட 61% அதிகம், மொத்தம் 4,635 அழைப்புகள் நேற்று மாலை 6 மணிவரை பெற்றுள்ளனர். இதில் 135 அழைப்புகள் தீக்காயம் சம்பவங்கள் தொடர்பானவையாகும்.
மேலும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான தீபாவளிக்காக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினருக்கு சென்னை மாநகராட்சி நன்றி தெரிவித்துள்ளது.