பீகார், நவம்பர் 15:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் “ மேற்கண்ட எதுவும் அல்ல ” எனும் (NOTA) விருப்பத்திற்கு எதிர்பார்த்த அளவில் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, பீகார் மாநிலத்தில் மொத்தம் 7.45 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.51 கோடி பேர் வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்கு சதவிகிதத்தில் 1.81 சதவிகிதம் ஆகும்.
முந்தைய 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 7.06 லட்சம் வாக்காளர்கள் (1.68%) நோட்டாவைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கு முந்தைய 2015 தேர்தலில் 9.4 லட்சம் பேர் (2.48%) நோட்டா வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
பீகாரில் நோட்டா வாக்குகளின் சதவிகிதம் கடந்த ஒரு தசாப்தமாக மெல்லக் குறைந்து வருகிறது. 2015இல் 2.48% என்ற உயர்ந்த அளவில் இருந்த நோட்டா வாக்கு, 2020 தேர்தலில் 1.68% ஆகச் சுருங்கியது. இப்போது 2025 தேர்தலில் 1.81% ஆக சிறிய உயர்வை கண்டாலும், மொத்த வாக்கு விகிதத்தில் மிகக் குறைந்த நிலைப் பதிவைத் தொடர்கிறது.
மேலும், 2024ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் பீகாரில் நோட்டா வாக்குகள் மிகவும் குறைந்த விகிதத்தில் இருந்தது எனவும் ஆணையத் தகவல்கள் காட்டுகின்றன. இது வாக்காளர்கள் பெரும்பாலும் கட்சிகளிலிருந்தே தங்கள் விருப்பத் தேர்வைச் செய்ததைக் குறிக்கிறது.
பீகாரில் 6.65 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருப்பது, அரசியல் அமைப்புக்களை எதிர்க்கும் மெளன எதிர்ப்பு என சில அரசியல் நிபுணர்கள் விளக்குகின்றனர். எனினும், மொத்த வாக்கு விகிதத்தில் மிகத் தாழ்வான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.