கோவை, அக்டோபர் 13:
கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உப்பிலிபாளையம் பகுதியிலிருந்து கோல்டுவின்ஸ் நோக்கி சென்ற கார், மேம்பாலத்தில் இருந்து வேகமாக இறங்கும் போதுதான், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியுடன் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த இருகூரைச் சேர்ந்த சேக் உசேன், அவருடன் பயணித்த பெண் மற்றும் இளைஞர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கார் அப்பளமாக நொறுங்கிய நிலையில் காரில் இருந்த 3 பேரின் உடல்களையும் நீண்ட போராட்டத்திற்குப் பின் போலீசார் மீட்டு, கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட மேம்பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பகுதிகளைக் கடக்க முன்பு 45 நிமிடங்கள் வரை ஆன நிலையில் தற்போது பத்து நிமிடங்களில் மேம்பாலத்தில் இந்த சாலையைக் கடக்க முடிகின்றது. முதன்மையாக இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவடைந்து, கோவை, அவிநாசி, சேலம், ஈரோடு வட்டாரங்களுக்குள் பயண நேரம் பெரிதும் குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விபத்துக்கான காரணங்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.