தஞ்சாவூர், ஜூலை 12:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தில் மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதவன் (10), பாலமுருகன் (10), ஜஸ்வந்த் (8) ஆகிய மூவரும் அந்த ஊரின் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, கிராம மக்கள் அனைவரும் அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். திருவிழா நடைபெறும்போது, மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய மூவரும் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனை அறியாத பெற்றோர் திருவிழாவில் சிறுவர்களை தேடியுள்ளனர், பின்னர் குளத்தில் அவர்களது உடமைகள் இருப்பதை கண்டனர். உடனடியாக குளத்தில் இறங்கி மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.