சென்னை, பிப்ரவரி 16:
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.