செங்கல்பட்டு, ஆகஸ்ட் 9:
தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021-ல் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 17.74 லட்சம் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ஏழை மற்றும் எளிய மக்களுக்காக ரூ.1,700 கோடி மதிப்பிலான 25,000 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின், “குமரியிலிருந்து சென்னை வரை மக்கள் நலத்திட்டங்களை நேரடியாக சென்று பார்த்து செயல்படுத்தி வருகிறோம். நாட்டில் 11.19% வளர்ச்சியுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி, ஸ்டாலின் ஆட்சி” என்று பேசினார்.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 லட்சம் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கியுள்ளதையும், பட்டா வழங்கும் பணிகளில் எப்போதும் தனிப்பட்ட கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். “2011 முதல் 2021 வரை பின்னேறிய தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்துள்ளோம். கல்வி மற்றும் மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்,” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.