சென்னை, ஆகஸ்ட் 02:
தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் உள்தமிழகத்தின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படவுள்ளதாகவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸ் இருக்கும் என முன் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டம் மற்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.